பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிக்கல்வி இயக்குனர், அரசு தேர்வுத்துறை இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்ட 8 இயக்குனர் பணியிடங்களும், 20 இணை இயக்குனர் பணியிடங்களும் உள்ளன
பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் சிவபதியிடம் சில இயக்குனர்கள் நெருக்கம் காட்டினர். அதே நேரம் பள்ளிக்கல்வியின் முக்கிய அதிகாரிக்கும் துறையின் அமைச்சரான சிவபதிக்கும் பனிப்போர் நடந்து வந்தது. இதனால் சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி தனது பதவியை இழந்தார்.
இதையடுத்து, அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., வைகைச்செல்வன் பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சர் ஆனார். அமைச்சர் வைகைச்செல்வன் திருச்சி மாவட்ட அ.தி.மு.க பொறுப்பாளராக இதற்கு முன்பு கட்சி பணியாற்றியுள்ளார். அதனால் முன்னாள் அமைச்சர் சிவபதியின் ஆதரவாளர்கள் மூலம் பள்ளிக்கல்வியின் முக்கிய உயர் அதிகாரிக்கும், சிவபதிக்கும் இடையே நடந்த நிழல் யுத்தத்தை அறிந்து கொண்ட வைகைச்செல்வன் பள்ளிக்கல்வியின் பிற இயக்குனர்கள் பற்றி முழுமையாக அறிந்து கொண்டார்.
சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு நடந்த பள்ளிக்கல்வித்துறையின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் வைகைச்செல்வன், ''பொது நூலகத்துறையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை தரமற்றதாக இருக்கிறது. சில முக்கிய இயக்குனர்கள் ஆளுங்கட்சியினருக்கு ஐஸ் வைப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள், துறை பணியை சரிவர கவனிப்பதில்லை" என்று கடுமையாக சாடினாராம். அமைச்சரின் ஆவேசத்தை பார்த்துவிட்டு பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குனர்கள் பலபேர் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.
எனவே பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் சிலர் அதிரடியாய் தூக்கியடிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்ட இயக்குனர்கள் பசையுள்ள இடங்களில் ஒட்டிக் கொள்ள இப்போதே ஆளுங்கட்சி மேலிடத்தின் சிபாரிசுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்..
No comments:
Post a Comment