மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
6-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தொடக்க ஊதியமாக ரூ. 27ஆயிரத்து 100 வழங்கப்படுகிறது. ஆனால், மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 17ஆயிரத்து 615 மட்டுமே வழங்கப்படுகிறது.
ஒரே விதமான பணியைச் செய்யும் மத்திய, மாநில அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இருவேறு ஊதியம் வழங்கப்படுவது சரியல்ல. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகள் 5 ஆண்டுகளாகப் போராடியும் பலனில்லை.
6-வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைவது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட ராஜீவ் ரஞ்சன் குழு, இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலும் கிராமங்களில் பணியாற்றுகின்றனர். அங்கு விலைவாசி குறைவாக இருப்பதால் ஊதிய உயர்வு தேவையில்லை என பரிந்துரைத்தது. அரசும் இதனை ஏற்று ஊதிய உயர்வு அளிக்க மறுத்து விட்டது.
இதனால், 10 ஆண்டுகளுக்கும் குறைவான பணிமூப்பு கொண்ட சுமார் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1.2 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 7-வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரிமியத்தை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment