Pages

Sunday, November 25, 2012

பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை கோரி வழக்கு

பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

உசிலம்பட்டி அருகே, கவுண்டம்பட்டி சூரியகாந்தியம்மாள் தாக்கல் செய்த மனு: நான், உசிலம்பட்டி அருகே திசுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் மனு அளித்தோம். அதன்படி, கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் 119 பட்டதாரி ஆசிரியர்கள், 27 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் செய்ய, 2011 மார்ச்சில் அரசு உத்தரவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அக்.,14ல், தகுதித்தேர்வு நடந்தது. நவ., 2 ல் தேர்வு முடிவு வெளியானது. நவ.,6 முதல் 7 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இவர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால், எங்களது இடமாறுதல் பாதிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சதீஷ் ஆஜரானார். நீதிபதி,""இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'' என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார். 

No comments:

Post a Comment