Pages

Thursday, January 9, 2014

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.16,965 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.16.965 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் அத்துறையின் அமைச்சர் கே.சி.வீரமணி.


தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.16.965 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் அத்துறையின் அமைச்சர் கே.சி.வீரமணி.

திருச்சி மாவட்டம், சோமரசன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வெற்றி உங்கள் கையில் என்ற திட்டத்தைத் தொடக்கி வைத்து, அவர் மேலும் பேசியது:

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வதற்கும், தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்கவும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் வெற்றி உங்கள் கையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் வீரமணி.

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த.சபீதா பேசியது:

கடந்த 3 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் ரூ. 45,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் பிளஸ்2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் 95% தேர்ச்சி இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து, தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்திலும் அமைச்சர் வீரமணி பங்கேற்றார்.

கடந்த ஆண்டு பொதுத்தேர்வில்70 சதவிகிதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற250 பள்ளித் தலைமையாசிரியர்களுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக சென்ற கல்வியாண்டில் நூறு சதவிகித தேர்ச்சி பெற்ற 53 பள்ளிகளுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கினார் அமைச்சர் வீரமணி.

விழாவுக்கு ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமை வகித்தார். கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி,தலைமைக் கொறடா ஆர். மனோகரன், எம்.பி.க்கள் ப.குமார், டி. ரத்தினவேல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.சந்திரசேகர், டி. இந்திராகாந்தி, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநர் மகேஸ்வரன், அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேசுவர முருகன் வரவேற்றார். இணை இயக்குநர் எம். பழனிச்சாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment