Pages

Thursday, March 6, 2014

ஆசிரியர்கள் அடையாள வேலைநிறுத்தம்: 33 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக டிட்டோஜேக் தலைவர் சி.சேகர் கூறியது: மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையையே அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
வேலைநிறுத்தத்தோடு, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் முன்னிலையில் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன என்றார் அவர். பாதிப்பில்லை: இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறியது: வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் எந்தப் பள்ளியும் மூடப்படவில்லை. ஆசிரியர் பயிற்றுநர்கள், அருகிலுள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன.
மாநிலம் முழுவதும் இந்த வேலைநிறுத்தத்தில் 33 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment