அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்காக மொத்தம் 1.8 கோடி இலவசப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
இந்தப் புத்தகங்கள் அனைத்தும் இரண்டாம் பருவம் தொடங்கிய நாளான வியாழக்கிழமை (அக்.3) வழங்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடங்களின் புத்தகங்களும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, பருவத்துக்கு இரண்டு புத்தகங்கள் என ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் பருவத்துக்கான இலவச புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதை உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் வியாழக்கிழமை (அக்.3) தொடங்கிவைத்தார்.
ஏற்கெனவே, இந்தப் புத்தகங்கள் மாவட்ட அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன. எனவே, இந்தப் புத்தகங்கள் அனைத்தும் முதல் நாளிலேயே வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment