"டிஜிட்டல்' வடிவம் மற்றும் பேப்பர் வடிவம் என, இரு முறைகளிலும், விண்ணப்பங்களை நிரப்ப வேண்டியுள்ளதால், தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.ஏற்கனவே, ஆசிரியரல்லாத பணியாளர் இல்லாத நிலையில், இந்தப் புதிய சுமைகளால், தலைமை ஆசிரியர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ், 5,000க்கும் மேற்பட்ட, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் உள்ள மாணவ, மாணவியருக்கென, நடப்பாண்டில், பல்வேறு இலவசத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.ஒவ்வொரு திட்டத்துக்கும், தனித்தனியாக விவரங்களை அளிப்பது, ஏற்கனவே, தலைமை ஆசிரியர்களுக்கு பணிச்சுமையை அதிகமாக்கியிருந்தது. தற்போது, கடந்த வாரத்தில் மட்டும், 22 வகையான படிவங்களை, "இ-மெயில்' மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பிவிட்டு, அப் படிவங்களை, "இ-மெயில்' மற்றும், "பிரின்ட்' எடுக்கப்பட்ட பேப்பர் படிவங்களாகவும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே வாங்கிய தகவல்களையே, மீண்டும் வேறு மாதிரியாகத் தொடர்ந்து வாங்கிக் கொண்டேயிருக்கும் நிலை, தலைமை ஆசிரியர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:பெரும்பாலான அரசுப் பள்ளிகளில், ஆசிரியரல்லாத பணியாளர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அவர்களின் பணியையும் சேர்த்து, தலைமை ஆசிரியர் கவனிக்கும் நிலை உள்ளது. இதனால், ஏற்கனவே பள்ளி வகுப்புகளை கண்காணிக்க முடியாமல், தவித்து வருகிறோம். இந்நிலையில், மீண்டும் மீண்டும் படிவங்களில் விவரங்களைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.அதிலும், "இ-மெயிலில்' அனுப்பிய படிவங்களை, "பிரின்ட்' எடுத்து, அதையும் ஒரு முறை நிரப்பி, கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்; விவரங்களை, "இ-மெயிலிலும்' அனுப்ப வேண்டும். ஒரே பணியை, இரு முறை எதற்காகச் செய்ய வலியுறுத்துகின்றனர் எனத் தெரியவில்லை. இதனால் நேரம், பண விரயம் என, தலைமை ஆசிரியர்களுக்கு பல சிக்கல்கள் உருவாகி உள்ளன."இ-மெயில்' குறித்து தெரியாத தலைமை ஆசிரியர்களின் பாடு, மிக பரிதாபமாக உள்ளது. "இ-மெயிலில்' படிவங்களைப் பெறுவது, நிரப்புவது, திருப்பி அனுப்புவது உள்ளிட்டவை குறித்து, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிப்பதும் அவசியமாக உள்ளது.புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி எதுவும் இல்லை. அதனால், அவர்கள் தினமும், "பிரவுசிங் சென்டரு'க்கு ஓட வேண்டியுள்ளது.காலிப் பணியாளர் நியமனம், கம்ப்யூட்டர் வசதி, தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி என, எந்த வசதியும் செய்து தராமல், பல மடங்கு பணிச்சுமை வழங்கி வருவதால், அனைத்து தலைமை ஆசிரியர்களும், கடும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment