ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 31.3.2015–க்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.8.2010–க்கு பிறகு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 23.8.2010–க்கு பின்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற நியமனத்துக்கு கல்வி அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த ஒப்புதலை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியை ஜெயசாந்தி உள்பட 32 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
கவலை அளிக்கிறது:
மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறி இருப்பதாவது:–தமிழக அரசு முதன்முறையாக நடத்திய ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் முதல் தாளில் 3 லட்சத்து 5 ஆயிரத்து 405 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில், 1735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2–வது தாளில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 121 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில், 713 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 0.34 சதவீதம் பேர் தான் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1 சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது கவலை அளிக்கிறது.ஆசிரியர் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. அதன்பின்பு நடத்தப்பட்ட துணைத் தேர்வில் 2.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் தகுதித்தேர்வை முடித்த ஆசிரியர்கள் யாரும் வேலை இல்லாமல் இல்லை. ஆனால் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளன.
இடைக்கால ஒப்புதல்:
இதுபோன்ற சூழ்நிலையில், தகுதித்தேர்வை முடிக்காதவர்கள், கட்டாய கல்வி சட்டம் கொண்டு வரப்பட்ட 1.4.2010–ல் இருந்து 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். இது, கட்டாய கல்வி சட்டம் பிரிவு 18–ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நியமனங்களை மேற்கொள்ள மத்திய அரசை, மாநில அரசு அணுக வேண்டும்.ஆனால், மாநில அரசு அதுபோன்று இதுவரை அணுகவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு இடைக்கால ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர்கள், 31.3.2015–க்குள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாத பட்சத்தில் அவர்களது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment