"டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என, இலவச கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.அனைவருக்கும் இலவச கட்டய கல்வி சட்டத்தை செயல்படுத்துவது குறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கூட்டம்,.. திருப்பூர் அரண்மனைப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களை சேர்ந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஒன்றியத்துக்கு இரு நடுநிலை, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொ) கரோலின் தலைமை வகித்தார். திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்சியாளர்கள் பிரபாகரன், கீதா ஆகியோர் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம் குறித்து விளக்கினர்."ஆறு முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டய கல்வி சட்டப்படி, அருகாமையிலுள்ள பள்ளியில் சேர்ந்து படிக்க உரிமை உள்ளது. ஏழை, எளிய மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு
வழங்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள், அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்."அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக "டியூசன்' எடுக்கின்றனர். இதனால், பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதில் குறைபாடு ஏற்படுகிறது. எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் "டியூசன்' நடத்தக்கூடாது. மீறினால், கட்டாய கல்விச்சட்டம் பிரிவு 17ஏ, 17பி படி, ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நன்கொடையும் வசூலிக்கக் கூடாது. அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து, ஆய்வுசெய்து, விதிமீறும் பள்ளிகள், ஆசிரியர்கள் மீது பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment