இந்த நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, நியமனத்தை ரத்து செய்ய, மதுரை பேரையூரை சேர்ந்த முத்துலெட்சுமி உட்பட 30 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வினோத்குமார் சர்மா சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யும்படியும், தடை விதிக்கும்படியும் அரசு சார்பில் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் சமூகநலத்துறை மற்றும் சத்துணவு திட்ட துணைச் செயலாளர் சந்திரமணி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு:
வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தவறாமல் பள்ளிக்கு செல்ல வேண்டும். அவர்கள் பசியால் வாடுவதை தடுக்க வேண்டும், பள்ளி செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் சத்துணவு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்தும் போது கிடைத்த அனுபவங்கள் அடிப்படையிலேயே அங்கன்வாடி மையம் அமைந்திருக்கும் 3 கி.மீ. தூரத்திற்குள் வசிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள், வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அங்கன் வாடி, சத்துணவு பணிக்கு அரசு பணிக்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை. இது ஒரு தற்காலிக பணியாகும். அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் கோர முடியாது. இவர்களுக்கு அரசின் அனைத்து விதிகளும் பொருந்தாது. சத்துணவு திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது? வேலையின் தன்மை அல்ல? என்பதை தனி நீதிபதி கவனிக்கவில்லை.
கிராம ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறவில்லை. ஒரு கிராமத்தில் தகுதியான நபர் இல்லாவிட்டால், 10 கி.மீ. தொலைவில் வசிக்கும் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதை தனி நீதிபதி கவனத்தில் எடுக்கவில்லை. சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் நியமனம் தொடர்பான சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில் தவறு இருப்பதாக கருதினால், வழக்கை டிவிஷன் பெஞ்ச்சிற்கு தனி நீதிபதி அனுப்பியிருக்க வேண்டும். அதை செய்யாமல் நியமனத்தை ரத்து செய்தது சட்டவிரோதம். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, துரைச்சாமி விசாரித்தனர். விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தனர். அடுத்த விசாரணை நவம்பர் 15க்கு தள்ளிவைக்கப்பட்டது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
No comments:
Post a Comment