உயர்கல்வி திட்டத்தில், தேவையான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின், 23வது பட்டமளிப்பு பல்கலைக் கழகத்தில் விழா நேற்று நடந்தது. 18 ஆயிரத்து 427 மாணவ மாணவிகளுக்கு, பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிறந்த மாணவ மாணவிகளுக்குத் தங்கப் பதக்கங்களை வழங்கி பேசியதாவது:பட்டம் பெறும் மாணவர்கள், வாழ்க்கையின் புதிய பயணத்தைத் துவக்க உள்ளனர். படிக்கும்போது கற்றுக் கொண்டது, அறிவாற்றல், திறன் போன்றவை புதிய பயணத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். சில நேரங்களில், வெற்றிகள் தேடி வரும். சில தருணங்களில், சிக்கலான சூழலைச் சந்திக்க நேரிடலாம். இதுவே, மாணவர்களிடம் மறைந்திருக்கும் உண்மைத் திறனை சோதிக்கின்ற நேரமாகும். கடின உழைப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு போன்றவை மட்டும்தான், சிக்கலில் இருந்து விடுபட உதவி செய்யும். மாணவர்கள் தாங்கள் கற்ற நல்ல விஷயங்களை, இந்தச் சமுதாயத்துக்கு அளிக்க வேண்டும். இது, அர்ப்பணிப்பு, தியாகம் செய்ய வேண்டிய நேரமாகும். நமது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமை மாணவர்களுக்கு உண்டு. உயர்ந்த இலக்குகளை அடைய செய்வதற்கும் பாடுபட வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம். இப்போது, சரியான கல்வியைத் தருவதில் முழுமையான கவனத்தைச் செலுத்த வேண்டும். ஒழுக்கம் இல்லாத கல்வி என்பது, நறுமணம் இல்லாத மலர் போன்றது. கல்வி என்பது, சக மனிதர்களின் உணர்வுகளை மதிக்க கற்று தருவதாகும். அப்போதுதான் முழு மனிதராக முடியும். நாட்டின் வளர்ச்சிக்கு உயர்கல்வியும், கல்வித் திட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அடுத்த தலைமுறையை உருவாக்குகின்ற, தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்கள் பற்றாக்குறையாக உள்ளன. உலகளவில், முதலிடத்தில் உள்ள 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெறவில்லை. கி.மு., ஆறாவது நூற்றாண்டில் இருந்து, 1800 ஆண்டுகளுக்கு நமது பழமையான கல்வித் திட்டமே உலகத்தை ஆண்டது. நாலந்தா பல்கலைக்கழகம் போன்றவை உலகத்தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களாக திகழ்ந்தன. எனவே, தற்போதைய உயர்கல்வி திட்டத்தில் தேவையான மாறுதல்களைக் கொண்டு வந்து, பழம்பெருமையை அடைவதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். பாடத் திட்டங்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவதுடன், கற்பிக்கும் முறையையும் மேம்படுத்த வேண்டும். பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு அறிவியல், தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, பல்கலைக்கழகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும். சாதாரண மக்களுக்குப் பயன்படும் வகையிலும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் புதிய கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
No comments:
Post a Comment