முறைகேடு, தாமதம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களை தவிர்க்க, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்களை வழங்க தேர்வு துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் போது சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. அவற்றை தவிர்க்க தேர்வு துறை பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களில் மாணவர்களின் புகைப்படம் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், முறைகேடுகளை தடுக்க மாணவர்களுக்கு தேர்வு அறையில் அவர்களது புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. இது 3 பகுதிகளாக இருக்கும். இதில் ஒரு பகுதி மாணவருக்கும், மற்றொரு பகுதி விடைத்தாள் திருத்தும் மையத்துக்கும், 3ம் பகுதி மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட ஒருங்கிணைப்பு மையத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.
விடைத்தாளில் மாணவர்கள் எத்தனை பக்கங்கள் எழுதி இருக்கின்றனர் என்ற விபரத்தை அதற்குரிய இடத்தில் குறிப்பிட்டால் போதும். இதனால் தேர்வு மைய மேற்பார்வையாளருக்கு பணி சுமை குறையும். அதிகபட்சம் 20 நிமிடங்களில் விடைத்தாள்களை பார்சல் செய்து விடலாம். எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர், தேர்வு எழுதாதவர்கள் எத்தனைபேர், முறைகேடுகளில் சிக்கியவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்களையும் பிழையின்றி எளிதாக கணக்கிட முடியும்.
விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் 12 தாள்களை எளிதாக பிரித்து கொடுத்து விடலாம். விடைத்தாள்களை திருத்தியபின் மாணவர்களின் பார்கோடை பார்த்து மதிப்பெண்ணை பதிவு செய்தால் போதும். தனியாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. முதல் கட்டமாக பரிசோதனை முயற்சியாக வரும் 23ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சிறப்பு பொதுத் தேர்வில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வை மாவட்டத்துக்கு தோராயமாக 5 மையங்கள் என்ற அளவில், குறைந்த எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளதால் இந்த தேர்வில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அப்போது நடைமுறை சிக்கல்கள் ஏதும் உள்ளதா என அறியப்படும்.
குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்து வரும் 2014ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment