அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாது என தனியார் பள்ளிகளிடம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அங்கீகாரம் பெறாத பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும் என தனியார் பள்ளி முதல்வர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
அங்கீகாரம் காலாவதியான பள்ளிகள் தங்களது அங்கீகாரத்தைப் புதுப்பிக்க சம்பந்தப்பட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடம் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எந்தப் பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக் கூடாது. அங்கீகாரம் காலாவதியான நாளிலிருந்து அந்தப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதமும், பள்ளி செயல்பட்ட நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய இடவசதியில்லாத 800-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்படுவதைத் தடுக்கவும், அங்கீகாரம் காலாவதியான பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தனியார் பள்ளி முதல்வர்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்ட பிற முக்கியமான விஷயங்கள் தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:
2016-க்குள் தகுதி பெற வேண்டும்: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை ஏப்ரல் 1, 2016-க்குப் பிறகு ஆசிரியர்களாக நியமிக்க முடியாது.
தனியார் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் சட்டம் நடைமுறைக்கு வந்த 01.04.2011-ஆம் தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் அதாவது, 31.03.2016-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஐந்து பிரிவுகளுக்கு மேல் இருக்கக் கூடாது
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை அதிகபட்சமாக ஒரு பிரிவில் 30 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும். 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவில் அதிகபட்சமாக 35 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும். 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவில் 50 மாணவர்கள் வரை சேர்க்கலாம்.
தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் விதிகளின் படி, ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 4 பிரிவுகள் மட்டுமே செயல்பட வேண்டும். ஐந்தாவது பிரிவு தொடங்க மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஒரு வகுப்பில் ஐந்து பிரிவுகளுக்கு மேல் தொடங்க அனுமதி இல்லை.
மாணவர்களின் மொத்த எடையில் புத்தகப் பையின் எடை 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது ஆய்வின் முடிவு. எனவே, தேவையற்ற வகையில் நோட்டுப்புத்தகங்களை வாங்குமாறு அறிவுறுத்தக் கூடாது.
மாணவ, மாணவியருக்கு குடிநீர் வசதிகள் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரம் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்டவை இந்தக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன
No comments:
Post a Comment