பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், பாதுகாப்பு விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்துவதை உறுதிசெய்ய, பள்ளி அளவில், பாதுகாப்பு குழுவை அமைக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் பிரதாப் என்பவர் தாக்கல் செய்த மனு: ஆட்டோக்கள், மேக்சி கேப், வேன்களில், சரக்குகளை ஏற்றிச் செல்வது போல், குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றனர். பாதுகாப்பு விதிகளை மீறுகின்றனர். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையையும் மீறி, அதிக அளவில் ஏற்றிச் செல்கின்றனர். இதனால், குழந்தைகளுக்கு ஆபத்து உள்ளது. மோட்டார் வாகன விதிகளில் கூறியுள்ளவற்றை, கண்டிப்புடன் பின்பற்றுவதில்லை.
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக, மாணவி சுருதி விழுந்து பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி பேருந்துகளுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஆட்டோக்கள், மேக்சி கேப்கள் பற்றி, எதுவும் கூறப்படவில்லை. அனைத்து பள்ளிகளிலும், பாதுகாப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. குழுவில், பெற்றோர், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், வாகனங்களின் பிரதிநிதிகள், பள்ளி ஊழியர்கள் இடம் பெற வேண்டும். பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, பள்ளி அளவில், பாதுகாப்பு குழுவை ஏற்படுத்த, உத்தரவிட வேண்டும்.
அதிக எண்ணிக்கையில், குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பிரதிநிதிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞரான பிரதாப், நேரில் வாதாடினார். அரசு தரப்பில் பதிலளிக்க, சிறப்பு அரசு பிளீடர் ஸ்ரீஜெயந்தி, பள்ளிக்கல்வித் துறை சார்பில், சிறப்பு அரசு பிளீடர் டி.கிருஷ்ணகுமார், நோட்டீஸ் பெற்று கொண்டனர். விசாரணை, இம்மாதம், 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment