பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு, பதிவு செய்யாத தனித் தேர்வர்களை, அறிவியலைத் தவிர, பிற பாடங்களில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தேனி, பூதிப்புரம், ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு: என் மகன் சூர்யா, தேனி, மேலப்பேட்டை நாடார் உறவின் முறை மெட்ரிக் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்தார். உடல்நிலை சரியில்லாததால், 10ம் வகுப்பு தனித்தேர்விற்கு விண்ணப்பித்தார். தேனி முதன்மைக் கல்வி அலுவலர், "செய்முறைத் தேர்வில் பங்கேற்க, 2012 ஜூனுக்கு முன், பதிவு செய்திருக்க வேண்டும். நீங்கள் பதிவு செய்யவில்லை' என, கூறி, சூர்யாவின் மனுவை நிராகரித்தார். கலெக்டரிடம் மனு அளித்தோம். அவர், தேர்வு எழுத அனுமதிக்குமாறு, முதன்மைக் கல்வி அதிகாரிக்கு அறிவுறுத்தினார். முதன்மைக் கல்வி அலுவலரோ, "தேர்வுத்துறை இயக்குனர் தான் முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
அரசு உத்தரவு, 292ன்படி, "செய்முறைத் தேர்வில் பங்கேற்க, குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்' என்கின்றனர். அந்த உத்தரவில், "செய்முறை தேர்வு பயிற்சியில், 80 சதவீத வருகைப் பதிவு இருக்க வேண்டும்' என, மட்டும் தான் உள்ளது; வேறு நிபந்தனைகள் இல்லை. இப்படி ஒரு நிபந்தனை உள்ளது என, தனித்தேர்வர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
அரசு உத்தரவு, 292க்கு, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். சூர்யாவை, எழுத்துத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்காவிடில், ஓராண்டு வீணாகும். அவரை தேர்வு எழுத அனுமதிக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார். பழனி செட்டியபட்டி வெங்கடேஸ்வரன், "என் மகள் பிரியமீனா, தனித்தேர்வு எழுத அனுமதித்து உத்தரவிட வேண்டும்' என, மற்றொரு மனு செய்தார்.
நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: செய்முறைத் தேர்வில் பங்கேற்க, பதிவு செய்யவில்லை என்பதை மனுதாரர்கள் ஒத்துக் கொள்கின்றனர். அறிவியல் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வை தவிர, பிற பாடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோருகின்றனர். 2013-14 கல்வியாண்டில், அறிவியல் செய்முறைத் தேர்வில், பங்கேற்பதாக கூறுகின்றனர்.
அறிவியல் எழுத்து மற்றும் செய்முறை தேர்வை தவிர, மற்ற பாடங்களுக்கு தேர்வு எழுத, மனுதாரர்களை அரசு தேர்வுகள் துறை இயக்குனர், முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment