ஆகஸ்ட் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடை பெற்றது.
இதில், 6.90 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மொத்தமாக 4.09 சதவீதம் பேர், அதாவது 14,495 பேர் இத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஆகஸ்ட் 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியானது. அப்போது கேள்வித்தாள், விடைகள் சார்ந்து ஆட்சேப மனுக்கள் கோரப்பட்டதுதான் தாமதம் என்பதுபோல, தேர்வு வாரியத்துக்கு 1,500க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன என்கின்றனர் அதிகாரிகள்.
வாரியம் உறுதி
அதிகாரிகள் மற்றும் துறை வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட அந்த கேள்வித் தாள்களிலும், அதன் விடைகளிலும் ஏராளமான தவறுகள் இருந்துள்ளன. புகார்களை பரிசீலித்து விடையளிப்போம் என உறுதி கூறிய தேர்வு வாரியம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த நவ. 5-ம் தேதி இறுதி விடைகளை வெளியிட்டது. அதிலும், அதிகாரிகளின் அலட்சி யம் தொடர்ந்தது. ஏராளமான விடைகள் தவறுதலாக இருந்தன. இந்த குளறுபடிகள் குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், தேர்வு வாரியத்திடமே நேரில் புகார் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக இரண்டே வாரங்களில் பாட வல்லுநர்கள் மூலம் புகார்களை விசாரித்து விடை தருகிறோம் என ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவாதம் அளித்தது. ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு எழுதி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று பல்வேறு நடைமுறைகளின்படி பணி ஒதுக்கீடு குறித்து தெரிவிக்கப்படும். ஆனால், தற்போது தேர்வு முறையிலும் அதன் கேள்விகள், அதற்கு துறை ரீதியான பதில்கள் என எதுவுமே சரியானதாகத் தெரியவில்லை. அதை சரி செய்யக்கோரி ஏராளமானோர் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு தயாராவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தேர்வர்கள் தெரிவிதனர்.
குளறுபடி
இந்த குளறுபடியில் பாதிக்கப்பட்ட கோவை, கிணத்துக்கடவை சேர்ந்த விஜயலட்சுமி (27) கூறியதாவது:
ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வில், எனக்கு (சி) வகை கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதில் சில கேள்விகள் முற்றிலும் தவறாக அச்சிடப்பட்டிருந்தன.
அரசு தேர்வுகள் சட்டத்தின்படி, கேள்வியில் தவறு இருப்பின் அந்த கேள்வி நீக்கப்பட்டு தேர்வர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும். ஒரு மதிப்பெண் கிடைத்தால்கூட ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். பத்துக்கும் மேற்பட்ட தவறுகள் இருக்கும் நிலையில் நிச்சயம் ஏராளமானோர் தேர்ச்சி அடைய வாய்ப்புண்டு என்றார்.
No comments:
Post a Comment