துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணியிடங்களுக்கான குரூப்–1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கும் என்று தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
துணை கலெக்டர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம்
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி அதில் அதிக மதிப்பெண் பெற்றால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக சொந்த மாநிலத்தில் வேலை பார்க்கலாம். ஆனால் குரூப்–1 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றால் துணை கலெக்டர் ஆக பணிஅமர்த்தப்படுவார்கள். அவர்கள் சொந்த மாநிலத்திலேயே பணியாற்றலாம். பின்னர் 8 அல்லது 10 வருடம் கழித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகலாம்.
குரூப்–1 தேர்வு வருடந்தோறும் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குரூப்–1 தேர்வு எப்போது வரும் என்று ஆவலுடன் ஏராளமான பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
இதுகுறித்து அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
79 பணியிடங்களுக்கு அறிவிப்பு
அரசுப்பணியாளர் தேர்வாணையம் 12 லட்சம் பேர் எழுதிய குரூப்–4 தேர்வு முடிவை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன. ஜனவரி மாதம் 2–வது வாரத்தில் இந்த முடிவு வெளியிடப்படும்.
குரூப்– 1 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.
அனைத்து துறைகளில் இருந்தும் காலிப்பணியிடங்கள் கேட்கப்பட்டு அவர்களும் பதில் அனுப்பி உள்ளனர்.
மொத்தம் 79 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.
துணை கலெக்டர் பணியிடம்–3, கிராமப்புற மேம்பாட்டு அதிகாரிகள் பணியிடங்கள்–10, வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் பணியிடங்கள்–33, துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடங்கள்–33 ஆக மொத்தம் 79 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் தேர்வு நடத்தப்படும். முதலில் முதல் நிலை தேர்வும் அதில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மெயின்தேர்வும் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
மெயின் தேர்விலும், நேர்முகத்தேர்விலும் சேர்த்து அதிக மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
No comments:
Post a Comment