அரசு பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் மாணவியை, இரண்டாவது திருமணம் செய்த, பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம்,பென்னாகரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 37. இவர், பென்னாகரத்தை அடுத்த, சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றினார்.
இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. இவரது மனைவியும், அரசு பள்ளி ஆசிரியை தான். இந்நிலையில், பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் மாணவியை, ஆசிரியர் ஆறுமுகம் ஆசை வார்த்தை கூறி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, முதன்மை கல்வி அதிகாரி மற்றும் பென்னாகரம் போலீசாருக்கு, புகார் வந்தது. விசாரணை நடத்தும்படி, பள்ளி தலைமையாசிரியருக்கு, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். தலைமையாசிரியர் பழனிசாமி, மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி, முதன்மை கல்வி அதிகாரியிடம், அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து, ஆறுமுகத்தை சின்னம்பள்ளியில் இருந்து, அரூர், புதுப்பட்டி அரசு பள்ளிக்கு தற்காலிக இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், திருமண சர்ச்சையில் சிக்கிய மாணவி, சில நாட்களாக, பள்ளிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, முதன்மை கல்வி அதிகாரி, மகேஸ்வரி கூறியதாவது: பள்ளியில் படிக்கும் மாணவியை திருமணம் செய்ததாக, ஆசிரியர் ஆறுமுகம் மீது புகார் வந்தது. விசாரணை நடத்திய போது, சம்பந்தப்பட்ட மாணவி தரப்பினர் அதை மறுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியர் ஆறுமுகம், மோதிரம் மாற்றி, மாணவியை, இரண்டாவது திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது. இது பற்றி போலீசார், அறிக்கை தயாரித்து, சென்னைக்கு அனுப்பியுள்ளனர். முதல் கட்டமாக, ஆசிரியர் ஆறுமுகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மகேஸ்வரி கூறினார்.
No comments:
Post a Comment